பெண் குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு பூப்பெய்தல். மனதளவிலும் உடலளவிலும் ஒரு பெண் குழந்தையின் அடுத்தகட்ட நகர்வு அது. தந்தையின் தோள்களிலும், மார்பிலும் விளையாடி, சாய்ந்து உறங்கிய சுட்டிப் பெண் குழந்தை, பூப்பெய்ததும் அம்மாவின் அரவணைப்பில் உறங்கிப் பழகும். பள்ளி செல்லும்போது ஏற்படும் மாதவிடாய் சுழற்சியை தனி ஆளாகத் கையாளத் தொடங்கும் போது அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தான் ஒரு பெரிய மனுஷி என்ற எண்ணம் எழுந்து, முதிர்ச்சியாக நடந்து கொள்ளத் தொடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்துமே சரியான வயதில் ஒரு பெண் குழந்தை பூப்பெய்தும் போது நிகழ்வது.
ஆனால், இப்போதெல்லாம், சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்திவிடுகின்றனர். குழந்தைத்தன்மை மாறாத பிஞ்சுக்குழந்தைகள் இளம் வயதிலேயே பூப்பெய்துவது குழந்தைகளை மட்டுமன்றி, பெற்றோரையும் மனதளவில் அதிகம் பாதிக்கிறது. இளம்வயதில் பூப்பெய்துவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கிய மானது உலகமயமாக்கல். உலகமயமாக்கலுக்குப் பிறகு நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம் இதற்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், `நாம் அன்றாடம் பயன்படுத்தும் டியோடரன்ட், ஃபெர்பியூம், நகப்பூச்சு, பற்பசை, சோப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிலேட்ஸ் phthalates), பாராபென்ஸ் (parabens), பினோல்ஸ் (phenols) ஆகிய மூன்று ரசாயனங்கள் பெண் குழந்தைகள் முன்னதாகவே பூப்பெய்து வதற்கு காரணமாக அமைந்துள்ளது‘ என்று கண்ட றிந்துள்ளனர். அந்த ரசாயனங்கள் சர்வசாதாரண மாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களிலும் உள்ளன.
அதே போன்று பிராய்லர் கோழி மற்றும் அதன் முட்டைகள், ஆக்சிடோசின் செலுத்தபட்ட பசுமாட்டின் பால் போன்றவையும் முக்கிய காரணமாக உள்ளன..
குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே பூப்பெய்தும் குழந்தைகளுக்கு உடலளவில் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும். ஆனால் இளம்வயதில் பூப்பெய்துவதைத் தள்ளிப்போட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் கனிமொழியிடம் பேசினோம்.
ஒரு பெண் குழந்தை பூப்பெய்துவதற்கான சராசரி வயது 12.4 ஆக இருந்தது. அது தற்போது 11.9 ஆகக் குறைந்துள்ளது. சராசரியாக 5 அல்லது 6 மாதங்கள் குறைந்துள்ளன. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துள்ள துரித உணவு கலாசாரம், ரசாயனங்களின் பயன்பாடு, விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இவை அனைத்தும் பெண் குழந்தை முன்னதாகவே பூப்பெய்துவதற்கான காரணங்கள். மற்றொரு முக்கியக் காரணி, குறைவான உடல் உழைப்பு.
முன்னர், குழந்தைகள் பள்ளிவிட்டு வந்ததும் வெளியில் சென்று வியர்க்க, விறுவிறுக்க விளையாடுவார்கள். ஆனால் இன்று வெளியில் விளையாடுவதே குறைந்துவிட்டது. பள்ளி முடிந்ததும் டியூஷன், நடன வகுப்பு, பாட்டு வகுப்பு என்ற பல பொறுப்புகள் அவர்கள் மேல் சுமத்தப்படுகின்றன. அதனால் குழந்தைகள் விளையாட்டு என்பதையே மறந்துவிட்டனர். மற்றொருபுறம் செல்போன், ப்ளே ஸ்டேஷன் என கேட்ஜெட்களுக்கு அடிமையாகி, உடல் உழைப்பைச் செலவழித்து விளையாடுவதைக் குழந்தைகள் புறக்கணிக்கின்றனர். இதன் மூலம் உடல் பருமன் ஏற்பட்டு, சிறிய வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர்.
துரித உணவுகள், ரசாயனங்கள் ஆகியவற்றின் மூலம் பூப்பெய்தலுக்குக் காரணமான ஹார் மோன்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே தூண்டப்படுகிறது. இதனால் குழந்தைகள் சிறிய வயதிலேயே பூப்பெய்துகின்றனர். பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதாலும், குழந்தைப் பெற்றுக்கொள்வதாலும் அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளும் ஆரோக்கியமான வளர்ச்சி இல்லாமல் முன்னதாகவே பூப்பெய்து வதற்கு வாய்ப்புள்ளது.
வாழ்க்கை முறை மாற்றத்தால் முன்னதாகவே பூப்பெய்தல் மட்டுமன்றி, மாதவிடாய் சுழற்சி நிறை வடைவதும் (மெனோபாஸ்) முன்னதாகவே நடைபெறு கிறது. முன்பெல்லாம் சராசரியாக பெண்களுக்கு 52 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. தற்போது 40, 45 வயதிலேயே மெனோபாஸ் ஏற்பட்டுவிடுகிறது. முன்ன தாகவே பூப்பெய்தும் குழந்தைகளுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாயின்போது அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், ரத்தசோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் அந்தப் பெண் வளர்ந்து கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
ஆண் குழந்தைகளிலும் முன்னதாகவே பருவ மடையும் பிரச்னை இருக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. பெண் குழந்தைகளுக்குப் பருவம் அடைவதற்கு முன்னதாக உடலில் மாற்றங்கள் ஏற்படும். முன்னதாக பருவ மடையும் ஆண் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது.
துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள், பதப்படுத் தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விட்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத காய்கறிகள், பழங்கள், பழச்சாறு அடங்கிய உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலமும் இயற்கையாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணமுடியும்.
ஆரோக்கிய வாழ்க்கை முறையின் மூலம் பெண் குழந்தைகள் முன்னதாகவே பூப்படைவதை தடுப்பது பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது. குழந்தை களுக்கு உணவு முறையிலும், வாழ்க்கை முறை யிலும் சீரான முறையை பழக்க வேண்டும்.
நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதே அனைத்திற்கும் சிறந்த தீர்வு..
பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலை தடுக்க இந்த வகை உணவுகளை கொடுங்கள்!
நம் பாரம்பரியம் சுட்டிக்காட்டிய ஆரோக்கிய உணவு வகைகளில் இந்த முளைக்கட்டிய பயறுகளும் ஒன்று. காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும் என்று நீங்க விரும்பினாலோ, மாலையில் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டும் என்று நினைத்தாலோ உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த முளைக்கட்டிய பயறுகள்.
ஏனென்றால், சாதாரண பயறுகளைவிட முளைக் கட்டிய பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட இவற்றில் ஒமேகா அமிலம், தயாமின், வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட் டீன்கள், நியாசின், அதிக அளவு ஆன்டி ஆக்ஸி டன்ட்கள், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
முளைக்கட்டிய பயறுகளின் நன்மைகள்:
இயற்கை உணவான தானியங்களை முளைக் கட்டி சாப்பிடுவதால், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும். சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோருக்கும் சிறந்த உணவு இதுவாகும். முளைகட்டிய பயறுகளில் கலோரி குறைவு என்பதுடன், அவை பசியையும் கட்டுக்குள் வைக்கும்.
முளைக்கட்டிய பயறுகளில் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. இது இரத்த விருத்திக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது. அதுமட்டு மல்லாமல், இரத்தசோகை நோயையும் தடுக்கிறது.
கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஏனென்றால், இதில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இது பார்வைத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
முளைக்கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும், இதில் வைட்டமின் பி சத்து மென்மையான சருமத்தை தருகிறது. சருமம் புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
தினமும் முளைக்கட்டிய பயறுகளை சாப்பிடு வதால், முடி வளர்ச்சி மேம்படும். ஏனென்றால், இதில் ஒமேகா அமிலம் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலையும் தடுக்கிறது.
முளைக்கட்டிய பயறு வகைகள் :
முளைக்கட்டிய கொள்ளு: உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பையைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது.
முளைக்கட்டிய கம்பு: உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.
முளைக்கட்டிய பச்சைப்பயறு :
சருமப் பளபளப்புக்கு உதவுகிறது. மறதி நோயை கட்டுப்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம்: சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தினமும் இதை ஒரு கப் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள், வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.
முளைக்கட்டிய வேர்க்கடலை, எள்: அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடல் மெலிந்து போய் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் அளவு முளைக்கட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால், உடல் எடை கூடும்.
குறிப்பு:
எக்காரணத்திற்காகவும் முளைக்கட்டிய பயறுகளை வேகவைத்தும், எண்ணெயில் பொரித்தும் சாப்பிடக் கூடாது. பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால், சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் சுவை தித்திப்பாக இருக்கும்.
முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகு, உடலுக்கு வேலை கொடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும். முடிந்தவரை வயது முதிர்ந்தவர்கள் இவற்றை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

