சுத்த சன்மார்க்கம் அறிவோம்!
அன்புள்ள நம்மவர்களுக்கு வந்தனம்!
பெருமானார் சொல்லுகின்றார் :
“சன்மார்க்கத்தை தானே நடத்திவருகின்றேன் “-என்று. “சொல்ல வேண்டியவற்றை சொல்லியுள்ளேன். புத்திமான் பலவான். விசாரணை செய்து உணர்ந்த உண்மையின் அளவு பாடுபடுங்கள். உங்களுக்குத் துணையாக இருந்து வருகின்றேன்.
“ இனி காலம் உண்டாகும். காலமாக நீ இருப்பாய்.
“ இதுநாள் வரையில் நீ அடைந்த அனுபவ அறிவு துணையால் பிற உயிர்களின் துன்பங்களைத் தீர்க்கும் முயற்சியில் உன் அளவில் இலகுவாய் முயற்சி செய்து வருவாயாக.
இதுபோதும், பெருமானார், உனக்கு வழங்கவேண்டியவற்றை வழங்கி, உன்னையும் உன் சுற்றத்தையும் காத்து அருளுவார்.
தீர்ப்பளிக்கும் காலம் மிக விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காலத்தை நாம் எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமாகக் காரியப்பட வேண்டும்.
இனியும் வீண்பொழுது கழிக்காமல் காரியப்பட வேண்டும்.
பெருமான் அவர்கள் நம் மீது பெருங்கருணை கொண்டு பெருந்தயவுடன் நமக்கு வழங்கியுள்ள நான்கு விஷயங்களை நாம் பற்றிக்கொண்டால்…
ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும் நாம் ஈடுகட்டி வர இயலும். பெருமானார் வரக்கூடிய காலம் மிக சமீபத்தில் இருக்கின்றது. அவருடைய அருள் ஆட்சியில் நாம் காரியப்பட சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். அதில் திருவருட்பெருஞ் ஜோதி அகவலை நாம் நாள்தோறும் ஓதி வர வேண்டும் என்பதும்
தயவுச்செயல்களை அவ்வப்பொழுது அறிவும் ஒழுக்கமும் பொருந்திய ஒருமை உணர்வுடன் நிராசையுடன் செய்துவர வேண்டும் என்பதும்
திருவருள் மகாவாக்கிய திருமந்திரமான, “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி “என்பதனை ஓதி வர வேண்டும் என்பதும் மேற்கொண்டு
சத்திய ஞான தீப வழிபாட்டின் ஞானசரியை பாடல்கள் 28 ல் கண்டபடி பாடி, பணிந்து வர வேண்டும் என்பதும் முதன்மை செய்தியாகும்.
இந்த நான்கு காரியங்களும் நாம் நமது ஊன் படிக்க, உளம் படிக்க, உணர்வு படிக்க, உயிர் படிக்க — என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
அதாவது வெறும் எழுத்தாக வெறும் சொல்லாக அல்லாமல் பொருள் உணர்ந்து படிப்பதாக இருக்க வேண்டும்.
வாச்சியார்த்தமோ லட்சியார்த்தமோ பயன் தருவதை விட அனுபவமே பயன் தரும்.
ஆதலால் ஊன்படிக்கும் நிலையிலிருந்து உணர்வு படிக்கும் நிலைக்கு நாம் மேல்தாவ வேண்டும்.
எப்படி தாவுவது?
தாவுவது என்பது ஈடுகட்டி வருவது ஆகும்.
ஈடுகட்டிவர வேண்டும் என்றால் முதலில் சுத்த சன்மார்க்கம் இன்னது என அறிதல் வேண்டும்.
தனித்திருந்தாவது ஒத்தவர்களுடன் கூடியாவது உத்தம சற்குரு அருளாசியுரையை கேட்டாவது அறிவோமாக!
–தயவுடன் சுயம்.
